இசைக்கென்று ரசிகர்கள் இருக்கிறவரை இளையராஜாவிற்கும் ரசிகர்கள் இருப்பர் என்பதில் எனக்கு ஐயமில்லை. இந்தப் பா இளையராஜாப் பா!
இளையராஜா அவர்களின் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பலப் பாடல்கள் இசைப் பா-வினை அலங்கரிக்கப் போவதில் ஆச்சர்யமேதுமில்லை.
பலரும், பலமுறை கேட்டு ரசித்த ஒரு பாடல் இது. பயணங்கள் முடிவதில்லை என்கிற படத்தில் இடம்பெற்ற ஒரு அற்புதப் பாடல் இது.
கவிஞர் நிலவை வர்ணித்து தள்ளியிருக்கிறார். வானம், மேகம், நிலவு, இரவு எல்லாவற்றையும் இணைத்து ஒரு பாட்டு. பாரதியார் கூட பாஞ்சாலி சபதத்தில் வானத்தை வர்ணனை செய்திருப்பார். சரி பாடலுள் செல்வோம்.
மழையை இப்படியும் ரசிக்கலாமே!
” முகிலினங்கள்அலைகிறதே, முகவரிகள்தொலைந்தனவோ?
முகவரிகள்தவறியதால்அழுதிடுமோ? அதுமழையோ? “
இப்பாடலின் சிறப்புகள் எனக்கு தெரிந்து இரண்டு.
- பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் இந்தப் பாடலின் சிறப்பு.
- இன்னொன்று ராஜாவின் இசை. பொதுவாக கிடாரை (Guitar) வல்லிசைக் கருவி என்று சொல்வார்கள். இந்தப் பாடலின் பெரும்பகுதி கிடாரால்தான் இசைக்கப்பட்டிருக்கிறது ஆனால் அத்தனை மென்மையாக.
இப்பாடலின் ஒவ்வோர் வரியையும் அணுஅணுவாக ரசிக்கலாம். இசையோடு கரையலாம். முக்கியமாக பாடலின் இறுதி நிமிடங்களைத் (4.10 – 4.39) தவற விடாதீர்கள். எனக்குத் தெரிந்து இன்றுவரை இப்படி யாரும் கிடாரினைப் பயன்படுத்தியதில்லை. இப்பாடலின் இறுதி நிமிடங்களுக்காகவே தியேட்டருக்கு சென்று பார்த்ததாகவெல்லாம் சிலர் கூறப் பார்த்திருக்கிறேன்.
போதும். ராஜாவும், பாலுவும் அழைக்கிறார்கள். இசையுள் நீந்துங்கள்
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணீயம்
படம்: பயணங்கள் முடிவதில்லை
இளைய நிலா பொழிகிறதே!
இதயம் வரை நனைகிறதே!
உலாப் போகும் மேகம், கனா காணுமே!
விழா காணுமே, வானமே!
வரும் வழியில், பனிமலையில் பருவநிலா தினம் நனையும்!
முகிலெடுத்து, முகம் துடைத்து விடியும்வரை நடை பழகும்!
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவமகள் விழிகளிலே கனவு வரும்!
முகிலினங்கள் அலைகிறதே, முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ? அது மழையோ?
நீல வானிலே, வெள்ளி ஓடைகள்!
போடுகின்றதே, என்ன ஜாடைகள்!
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்?
தளம் குறித்த உங்கள் கருத்துகள், ஆலோசனைகள், தகவல்கள் அனைத்தையும் எதிர்பார்க்கிறோம். இசையால் இணைவோம்.