பொன் ஒன்று கண்டேன்…

இசை வணக்கம்

தமிழ் திரையிசையின் மூத்த மகன் – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி மறைந்து விட்டார், காற்றோடு கலந்து விட்டார். இசைப்பாவின் இரங்கல் அஞ்சலி, அவர் பாடல்கள் மூலம் தொடர்கிறது.

நண்பர்கள் இருவரும் பேசிக்கொள்வது போல் அமைந்த பாடலிது. இருவரம் தாங்கள் பார்த்த பெண்ணை பற்றி பகிர்ந்து கொள்கின்றனர். பிருந்தாவனா சாரங்கா என்ற ராகம், எளிமையும் இனிமையும் நிறைந்தது. கண்ணதாசன் வரிகள். ஜாம்பவான்கள் டி.எம்.எஸ் மற்றும் பி.பி.எஸ் இணைந்து பாடியுள்ளனர். Dynamics என்பார்கள், ஒரே வரியை வேறு வேறு பாவங்களுடன் இருக்கும். இந்த பாடலில் இதனை இலகுவாக அனுபவிக்கலாம். மெல்லிசை என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பாடல்.

கீச்சு ‏@thadeus_anand – கடந்த 34 ஆண்டுகளில் கண்ணதாசன் எக்கச்சக்கமாக எழுதிக் குவித்ததற்கெல்லாம் இன்றுமுதல் இசையமைக்கவேண்டிய இனிய வேலை எம்எஸ்வி அவர்களுக்கு. #RIPMSV.

MSV with kannadasan

படம் : படித்தால் மட்டும் போதுமா
இசை : மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ், டி எம் எஸ்

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

பூ ஒன்று கண்டேன்
முகம் காண வில்லை
ஏன்னென்று நான் சொல்லாகுமா ?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா ?

நடமாடும் மேகம்
நவநாகரீகம்
அலங்கார கிண்ணம்
அலை போல மின்னும்

நடமாடும் செல்வம்
பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
உயிராக மின்னும்

துள்ளி வரும்
வெள்ளி நிலா
துள்ளி வரும்
வெள்ளி நிலா

துவண்டு விழும்
கொடி இடையால்
துவண்டு விழும்
கொடி இடையால்

விண்ணோடு விளையாடும் பெண்
அந்த பெண் அவளோ
சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை

உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி

நீ காண வில்லை
நான் கண்ட காட்சி
நீ காண வில்லை

என் விழியில்
நீ இருந்தாய்
என் விழியில்
நீ இருந்தாய்

உன் வடிவில்
நான் இருந்தேன்
உன் வடிவில்

நான் இருந்தேன்

 

நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

இசைப்பா+

ஏறக்குறைய 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் எம்.எஸ்.வி.

இசைப்பாவில் வந்த எம்.எஸ்.வி-யின் பிற பாடல்களுடன் மகிழ, நினைவு கூற சொடுக்கவும் :

MSV Irangal

கொடுத்தெல்லாம் கொடுத்தான்…

வணக்கம்.

இன்றைக்கு தமிழ் திரையிசையின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார். உலகெங்கும் உள்ள தமிழ் திரையிசை ரசிகர்களும் அவர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இன்றைக்கு இசைப்பா தளத்தில் இடம்பெறும் பாடல் படகோட்டி படத்தில் இடம்பெற்ற பாடல். பாடலை உருவாக்கிய இசை மேதைகள் அனைவரும் மறைந்துவிட்டார்கள். பொதுவுடைமையை விளக்கும் வாலியின் வரிகள். கம்பீரமான டி எம் எஸ் குரல். வனப்பான மீனவ எம்.ஜி.ஆர். அனைத்தையும் அழகே சேர்க்கும் மெல்லிசை மன்னர்களின் இசை.  காலங்கள் பல சென்றாலும் என்ன?  எந்நாளும் காற்றில் நிலைத்திருக்கமல்லவா இப்பாடல்?

நகைச்சுவை நடிகர் விவேக்கின் கீச்சு ‏@Actor_Vivek – அய்யா! உங்கள் தசை பயணம் நின்று இருக்கலாம்; ஆனால் இசை பயணம் தொடரும்! ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது!! விஸ்வ “நாதம்”!

கவிஞர் வைரமுத்துவின் இரங்கல் (சில வரிகள்) :
மெல்லிசை மன்னரின்
இசைமூச்சு நின்றுவிட்டது
என்று சொல்வதா?

இந்த நூற்றாண்டில்
அதிகமாக வாசிக்கப்பட்ட
ஆர்மோனியம் அடங்கிவிட்டது
என்று சொல்வதா?

ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி
மறைந்துவிட்டார் என்று சொல்வதா?

எங்கள் பால்ய வயதின் மீது
பால்மழை பொழிந்த மேகம்
கடந்துவிட்டது என்று சொல்வதா?

தமிழ்த் திரையிசைக்குப்
பொற்காலம் தந்தவரே!
போய்விட்டீரா என்று புலம்புகிறேன்

அரை நூற்றாண்டு காலமாய்த்
தமிழர்களைத் தாலாட்டித்
தூங்கவைத்த கலைஞன்
இன்று இறுதியாக உறங்கிவிட்டார்.

அவரது இசை
இன்பத்துக்கு விருந்தானது;
துன்பத்துக்கு மருந்தானது.

அவரது இசை
தமிழின் ஒரு
வார்த்தையைக்கூட உரசியதில்லை.

ஒரு நகைக் கலைஞன்
ஆபரணம் செய்வதற்காக
சுத்தத் தங்கத்தில்
கொஞ்சம் செம்பு கலப்பது மாதிரி
கர்நாடக இசையில்

மேற்கத்திய இசையைப்
பொருத்தமாய்க் கலந்து
புதுமை செய்தவர்.

அவர் தொடாத ராகமில்லை;
தொட்டுத் தொடங்காத பாடலில்லை.

அமிர்தம் பொழிந்த விரல்களே
காற்று மண்டலத்தையே
கட்டியாண்ட விரல்களே !
நீங்கள் தொட்ட உயரத்தை
யாரும் தொடமுடியாது.

பல தலைமுறைகளுக்கு
நீங்கள் நினைக்கப்படுவீர்கள்!!

“வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை எம்.எஸ்.வி”

அவரை இழந்து
வாடும் குடும்பத்திற்கும்,
உலகம் முழுவதும் உள்ள
அவரது ரசிகர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

MSV with MGR

படம் : படகோட்டி
இசை : மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடலாசிரியர் : வாலிப வாலி
பாடியவர் : டி எம் எஸ்

கொடுத்தெல்லாம் கொடுத்தான் – அவன்
யாருக்காக கொடுத்தான் ?
ஒருத்தருக்கா கொடுத்தான் – இல்லை
ஊருக்காக கொடுத்தான் !

கொடுத்தெல்லாம்…

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா ?

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலை நிலா, ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா ?

உனக்காக ஒன்று
எனக்காக ஒன்று, ஒருபோதும்
தெய்வம் கொடுத்ததில்லை!!

கொடுத்தெல்லாம்…

படைத்தவன் மேல்
பழியுமில்லை
பசித்தவன் மேல்
பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டால்
உழைத்தவரகள் தெருவில் நின்றால்

பலர் வாட வாழ
சிலர் வாழ வாழ, ஒருபோதும்
தெய்வம் கொடுத்தில்லை

கொடுத்தெல்லாம்…

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்!

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்!
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்!

எது வந்த போதும்
பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் !

கொடுத்தெல்லாம்…

இசைப்பா +

நம் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு (நீராரும் கடலுடுத்த)இசையால் சிறப்பு செய்தவர் எம்.எஸ்.வி.

இசைப்பாவில் வந்த எம்.எஸ்.வி-யின் பிற பாடல்களுடன் மகிழ, நினைவு கூற சொடுக்கவும் :

MSV Irangal

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…

இசையின் இன்ப வணக்கம்.
சில பாடல்களின் முதல் அடியைக் கேட்டவுடனே, பாடப் பிடிக்கும். அந்த வகையில் இந்த தலைப்பைப் பார்த்தவுடனே உங்கள் மனம் மெட்டிசைத்திருக்கும். கண்ணதாசனின் அற்புத வரிகளும், எம்.எஸ்.வி -ன் இனிய இசையும், எஸ்.பி.பி.-யின் வசீகரிக்கும் குரலும் இணைந்து பல ஆண்டுகள் தாண்டியும் இப்பாடலைக் கொண்டாடும்படி செய்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பாடல் அமைந்த சூழலும், படமாக்கப்பட்ட விதமும் இயல்பாக இருக்கும். வர்த்தக ரீதியான ரஜினி படங்களுக்கு முன்னால் வந்த இயல்பான, நகைச்சுவைப் படம் தில்லு முல்லு ஆகும்.
இவ்வாண்டு இதே படத்தை ரீ-மேக் செய்து வெளியிடப்பட்டது. அதில் இப்பாடலும் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவ்வளவுதான். இப்போது பழைய தில்லுமுல்லுக்கே நாம் சென்று விடுவோமாக! 😉
படம்:தில்லுமுல்லு
பாடலாசிரியர்:கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா!

ராகங்கள்……

இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா!

ராகங்கள் பதினாறு….

இசைப்பா +

இயக்குனர் கே.பாலச்சந்தர் ரஜினிகாந்தை வைத்து தயாரித்து, (+) இயக்கிய ஒரே படம் தில்லுமுல்லு

இன்னுமொரு இனிய பாடலில் மீண்டும் இணைவோம். கருத்துகள், திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி