வணக்கம்.
காதல் பாடல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். அவ்வகையில் இன்னுமொரு இனிய பாடல். ஏற்கனவே மழையில் குளித்த மலர்வனம் பாடலைத் தந்தோம். அதே பாணியில் இன்னுமொரு காதல் பாட்டு. வித்யாசாகர்+பா.விஜய் கூட்டணியில்.
பாடகர்களும் சும்மா இல்லை. கார்த்திக், ஷ்ரேயா கோஷல். சற்றே பெரிய அணி இப்பாடலில் இணைந்திருக்கிறது. பாடல் குறித்து கவிஞர் சொல்கிறார்..
”இளைஞன் திரைப்படம் 1959ல் நடக்கின்ற கதைக்களம். இந்த மெட்டுக்கள் புதுமையாய் இருக்க வேண்டும். ஆனால் நவீன நகரத்துவம் இருக்கக் கூடாது என்ற விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பாடல்! எனவே இதை படமெடுக்க ரோம், வெனீஸ் போன்ற புராதனச் சின்னங்களோடுதான் பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.
பாடல் வரிகளாய் ஹைக்கூ வடிவத்தைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை பிறந்தது. கட்டறுத்த காற்றாய் கவிதைகள் கிளம்பின!
ஆண்: ஒரு நிலா.. ஒருகுளம்!
ஒரு மழை.. ஒரு குடை!
நீ நான் போதும் ஒரு விழா!
பெண்: ஒரு மனம்.. ஒரு சுகம்!
ஒரு இமை.. ஒரு கனா!
நீ நான் போதும் ஒரு யுகம்! “
ஆம். ஹைக்கூ வடிவத்தை அடியொற்றி, சந்தச் சுவை கூட்டி, தமிழோடு விளையாடும் வார்த்தைக் குவியல்கள்தான் பாடல். பாடலுக்கேற்ற ஈர்ப்பைக் கொடுக்கிறது இசை. தெளிவாக வார்த்தைகள் விழுகின்றன. இதுவே பாடலைக் கேட்பதற்கான உற்சாகத்தையும் தருகிறது. வரிகளை வாசித்தாலே ஒரு உற்சாகம் பிறக்கும். யூட்யூப்-ல் இப்பாடலின் வீடியோவும் இல்லை! வழக்கம்போல் பாடலைக் கேட்டு ரசிக்க செவிகளைத் தயார்படுத்துங்கள்!
படம்: இளைஞன்
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள்: கார்த்திக், ஷ்ரேயா கோஷல்
நெடும்பகல்…. நீண்ட கனவு!
நிஜமாகுமா?
ஒரு நிலா ஒரு குளம்
ஒரு மழை ஒரு குடை
நீ..நான் போதும்
ஒரு விழா!
ஒரு மனம் ஒரு சுகம்
ஒரு இமை ஒரு கனா
நீ..நான் போதும்
ஒரு யுகம்!
ஒரு கணம் இரு இதழ்
ஒரு நிழல் இரு தடம்
நீ..நான் போதும்
ஒரு தவம்!
(ஒரு நிலா ஒரு குளம்..)
காற்றில் ஒட்டிய முன்பனி நீ
பனியை ஒற்றிய ஒளிவிரல் நான்!
மேகம் கும்மிய மின்னல் நீ!
மின்னல் தூவிய தாழை நான்!
சங்கம் கொஞ்சிய செய்யுள் நீ
செய்யுள் சிந்திய சந்தம் நான்!
வெட்கம் கவ்விய வெப்பம் நீ!
வெப்பம் தணிகிற நுட்பம் நான்!
நீ..நான் போதும்
முதல் தனிமை!
(ஒரு நிலா ஒரு குளம்..)
மஞ்சம் கொஞ்சிய மன்மதம் நீ!
கொஞ்சல் மிஞ்சிய கொள்முதல் நான்!
மொழிகள் கெஞ்சிய மௌனம் நீ!
மௌனம் மலர்கிற கவிதை நான்!
ஓவியம் எழுதும் அழகியல் நீ!
உன்னை வரைகிற தூரிகை நான்!
உயிரை மீட்டிய விழிவிசை நீ!
உன்னுள் பூட்டிய இதழிசை நான்!
நீ..நான் போதும்
புது உணர்வு!
இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்.