என்ன குறையோ என்ன நிறையோ!

இசை ரசிகர்களுக்கு வணக்கம்.

இன்றைய பாடல் ஒரு சிறப்புப் பாடல். அது எந்தளவுக்கு சிறப்பு என்பதை அறிய முழுதும் படியுங்கள்.

இசைப்பாவில் கண்ணன் பாடல்கள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. ஆனால் இதில் உள்ள சிற்ப்பு தனிரகம். பலகாலம் தமிழ்த் திரையுலகில் பாடல்கள் எழுதிவந்த கவிஞர் அறிவுமதி ஒருகட்டத்தில் திரைப்பாடல்களே எழுதுவதில்லை என ஒதுங்கிவிட்டார்.

மந்திரப்புன்னகை (2010) படம் மூலமாக மறுபிரவேசம் செய்தார். அதிலும் இந்த பாடலுக்கு இன்னொரு சிறப்பு இருபொருள்.
பாடலைக் கேட்கையில் முழுமையாக கண்ணன் பாட்டு என்றுதான் தோன்றும்.  அது ’அ’ண்ணன் பாட்டு!
பாட்டில் கண்ணனை அண்ணனாக மாற்றினால் பாடலின் மொத்த பொருளும் மாறும்.
 Sudha Ragunathan
இதே பாடல் குறித்து கானாபிரபா எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகள்..
சாஸ்திரிய சங்கீத உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்கள் பலர் திரையிசை உலகுக்கு வந்து தம் தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது காலாகாலமாக நடந்து வரும் சமாச்சாரம். ஆனால் அதற்கும் கூட நல்லதொரு தருணம் வாய்க்கவேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் பாடகி சுதா ரகுநாதன். இன்றைய நிலையில் சாஸ்திரிய சங்கீதப் பரப்பில் சுதா ரகுநாதன் ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது மிகையில்லை. உள்ளூரில் மட்டுமன்றி தமிழர்கள் பரந்து வாழும் வெளிநாடுகளிலும் இவருக்கான பரந்துபட்ட ரசிகர் வட்டம் இருப்பதே அதற்குச் சான்று.
சுதா ரகுநாதனையும் திரையிசை உலகம் விட்டுவைக்கவில்லை. இசைஞானி இளையராஜா (இவன்), தேனிசைத் தென்றல் தேவா (கல்கி), வாரணம் ஆயிரம் (ஹாரிஸ் ஜெயராஜ்) என்று சுதா ரகுநாதனின் குரலைத் திரையிசைப்பாடல்களில் முன்னணி இசையமைப்பாளர்கள் இவர்கள் பொருத்திப்பார்த்தார்கள். உண்மையில் அவர்களுக்கெல்லாம் கட்டுப்படாத இந்தக் குரல் இலாவகமாக, கச்சிதமாகப் பொருந்திப் போனது என்னவோ இந்த ஒரு பாடலில் தான் என்பேன். அந்தப் பாடல் தான் “மந்திரப் புன்னகை” படத்தில் வரும் “என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்”இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் இன்னும் ரசிகர்களால் முன்னோ தூக்கி நிறுத்திப் பாராட்டப்பட வேண்டிய இசையமைப்பாளர் வித்யாசாகர் என்பேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக வித்யாசாகர் இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று சீசனுக்கு சீசன் வந்து போகும் நிலை இவருடையது. இவரைக் கச்சிதமாகப் பயன்படுத்தக் கூடிய இயக்குனர்களில் கரு.பழனியப்பனும் ஒருவர். பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், (இன்னும் வெளிவராத)சதுரங்கம், தற்போது வெளியாகியுள்ள மந்திரப்புன்னகை போன்ற படங்களில் இந்தக் கூட்டு எவ்வளவு தூரம் சிறப்பாக அமைந்திருக்கின்றது என்பதற்கு அந்தப் படங்களின் பாடல்களே சான்றாக விளங்கி நிற்கின்றன. இவர்களோடு இன்னொரு முக்கியமானவர், அவர் தான் பாடலாசிரியர் அறிவுமதி. ஒரு நீண்ட அஞ்ஞாதவாசம் இருந்து மீண்டவருக்கு ஒரு அறிமுகமாக இப்படம் கிட்டியிருக்கின்றது. அறிவுமதியைப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கின்றார் வித்யாசாகர். மெட்டுக்குப் பாட்டெழுதும் பெரும்பான்மைச் சூழலில் பாடல்வரிகளுக்கு மெட்டமைக்கும் சவாலை வித்யாசாகர் ஏற்கும் போது அறிவுமதி போன்ற கவிஞர்களின் பாடல்வரிகள் தான் அந்தச் சவாலுக்கு உறுதுணையாக வளைந்து கொடுத்து இசை வளையத்துக்குள் கட்டுப்பட்டுவிடுகின்றன.
****************
இந்த பாடல் – கேட்டதும் பிடிக்கும்!

படம்: மந்திரப்புன்னகை
பாடலாசிரியர்: அறிவுமதி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுதா ரகுநாதன்

கண்ணா….! கண்ணா….!

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

(என்ன குறையோ..)

நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்

வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப்போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான்
கண்ணில் மழைத் துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்த கண்ணனை
அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே!

(என்ன குறையோ…)

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் வரலாம்
உறவைப் போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழிகேட்டு பறவை வாடலாம்
புதிரான கேள்வி யாவிலும்
விடையாக கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான் எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையால் உலகினை அணைப்பான்

அந்த கண்ணனை
கனிவு மன்னனை
தினம் பாடி வா மனமே!

 இன்றோடு இசைப்பாவுக்கு வயது இரண்டு..

முதலாம் ஆண்டு –சின்னக் கண்ணன்

இப்போது என்ன குறையோ? என்ன நிறையோ.. எங்களிடம் சொல்லலாமே!

இணைப்பு –

கானாபிரபாவின் முழுமையான பதிவைப்படிக்க

கண்ணனின் வண்ணப்படம் -வரைந்தது -ஷண்முகவேல் -வெண்முரசு -நீலம் –அத்தியாயம்-38

தேவனின் கோவில்

இசை வணக்கம்.

பாடல் குறித்து எழுத்தாளர் சுகா சொன்னது முதலில்:

‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன். சொல்லிவைத்தாற்போல நண்பர் விக்கி, நெதெர்லேண்ட்ஸிலிருந்து ஃபோனில் அழைத்தார்.

‘சுகா, குருவி சேக்குற மாரி துட்டு சேத்து, குட்டியானை கணக்கா ஒரு பியானோ வாங்கியிருக்கென்’.

‘வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா, விக்கி?’.

‘பொறவு? அதே சோலிதானெ!’.

‘தேவனின் கோயில் வாசிச்சு பாருங்க’ .

சிலநொடிகள் மௌனம். ‘விக்கி, விக்கி. லைன் கட் ஆயிட்டா?’

‘என்ன சுகா இது அநியாயம்? அந்தப் பாட்டப் பத்திப் பேசத்தானெ ஒங்களக் கூப்பிட்டென். ரைட் ஹேண்ட் நோட்ஸ்லாம் ப்ராக்டிஸ் பன்ணிட்டென். லெஃப்ட் ஹேண்ட்ல பாஸ் கிதார் நோட்ஸ்தான் கைய ஒடிக்கி. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல் வாசிச்சிருவ்வேன்னுதான் நெனைக்கென்’.

என்னைப் போலவே திருநவேலிக்காரரான விக்கி, வயலினும், பியானோவும் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ’தேவனின் கோயில்’ பாடலின் பாஸ்கிதார் பகுதிகளை ஒரு மாதத்தில் வாசித்து விடுவேன் என்று விக்கி சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. பொதுவாகவே இளையராஜாவின் பாடல்களின் ஆதார அஸ்திவாரமே, பாஸ்கிதார்தான். ஒட்டுமொத்தப் பாடலின் கட்டுமானத்தையும் தாங்கிப் பிடிக்கும் பாஸ்கிதாரின் அற்புதமான வாசிப்பை ‘தேவனின் கோயில்’ பாடல் முழுவதும் நாம் கேட்கலாம். சினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள் தனது கிதார் பயிற்சியின் போது ‘தேவனின் கோயில்’ பாடலின் கிதார் பகுதிகளை, ரகசியமாக ரசித்து வாசித்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

‘ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப்ரியம் ப்ரேமவஸ்யப்ரேமம்’ என்று இளையராஜாவின் குரலில் அந்தப் பாடல் துவங்கும் போதே கணேசண்ணனின் கண்கள் கலங்கத் துவங்கும். சொல்லியிருந்த ’விவா டீ’ கைக்கு வரவும், கொஞ்சமும் கூச்சப்படாமல் தரையில் உட்கார்ந்து பாடலைக் கேட்க ஆரம்பிப்பான். பாட்டு முடிந்த பிறகுதான் கண்களைத் திறப்பான். ‘அண்ணாச்சி, இன்னொரு மட்டம் இந்தப் பாட்ட போடுங்களென்’ என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ‘தம்பி, இன்னொரு விவா டீ சொல்லென்’ என்பான்.

‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’.

ஆனாலும் அன்று மாலையே, ‘சதனுக்குப் போவோமா? தேவனின் கோயில் கேட்டுட்டு வருவோம்’ என்பான்.

கணேசண்ணன் சொன்னது போல, தேவனின் கோயில் பாடலோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது பங்களிப்பும் அந்தப் பாடலை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. சித்ராவின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கை ‘தேவனின் கோயில்’ பாடல் ஆற்றியிருக்கிறது. மிக சன்னமான தொனியில் இந்தப் பாடலைப் பாடத் துவங்கும் அவர், இரண்டாவது சரணம் முடியும் இடமான ‘நானோர் கண்ணீர்க் காதலி’ என்னும் போது குரல் உடைந்து, அதேசமயம் ஸ்ருதிவிலகாமல் பாடி, கேட்பவரைக் கலங்க வைக்கிறார். அந்த சமயத்தில் முழுமையாக தமிழைப் புரிந்து கொண்டு பாடக்கூடியவராக சித்ரா இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்ற வரியிலும், ’கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா’ என்ற வரியிலும் அவரது குரலிலுள்ள உணர்ச்சியை கவனித்தால், ‘யாருப்பா சொன்னா அது மலையாளத்துப் பிள்ளன்னு? அது நயம் தமிளச்சில்லா’ என்று அடித்துச் சொல்லி விடலாம்.

 

இதுபோல ‘வாடி என் கப்பக்கிழங்கே’ பாடலாசிரியராகவே அதிகமாக அடையாளம் காட்டப்பட்டுவரும் கங்கை அமரனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று ‘தேவனின் கோயில்’.

கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான பயிற்சியில் உள்ள ஒரு பெண் காதல்வயப்படுகிறாள். காதலனுடன் இணைய முடியவில்லை. இதை பாடலின் முதல் வரியிலேயே எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிடுகிறார்! ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே!’. காதலனுடன் இணைய முடியாத காதலியை, ‘பிரிந்தே வாழும் நதிக்கரை போல, தனித்தே வாழும் நாயகி’ என்கிறார், கங்கை அமரன். துக்கத்தின் விளிம்பில் நின்று அவள் தன்னைப் பற்றி ’ஒருவழிப்பாதை என் பயணம்’ என்று பாடியபடியே, ’இணைவது எல்லாம் பிரிவதற்காக, இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக, மறந்தால்தானே நிம்மதி’ விரக்தியின் உச்சத்தைச் சொல்கிறார்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசையமைப்பை எடுத்துக் கொண்டால் அதன் மெட்டைச் சொல்வதா, வாத்தியங்களின் அமைப்பைச் சொல்வதா, அதன் தாளத்தைச் சொல்வதா, எதைச் சொல்வது என்று புரியவில்லை. மிக எளிமையாகச் சொல்வதாக இருந்தால் இது ஒரு சோகப்பாடல். ஆனால் பாடலின் துவக்கத்தைக் கேட்டால் ‘ப்ரேமம் ப்ரேமாதி’ என நவீனமான முறையில் பல்குரல் பதிவாக இளையராஜாவின் குரல் கேட்கிறது. பிறகு சித்ரா ’தேவனின் கோயில்’ எனத் துவங்கும் போதே நம் மனம் கனக்கத் துவங்குகிறது. ’இங்கு என் ஜீவன் தேயுதே’ என்னும் வரியில் தேயு . .தே என்கிற ஒரு வார்த்தையில், பின்னால் வர இருக்கும் இசை பூகம்பத்தை நமக்கு சொல்லாமல் உணர்த்திவிடுகிறார், இளையராஜா.

பல்லவி முழுதும் தாளம் ஏதுமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலின்முதல் இடையிசை (First interlude) தேவாலய மணியின் ஓசையுடன் துவங்கும் போதே, படம் பார்க்காமலேயே நம் கண்கள் முன்னால் காட்சி விரிகிறது.

இப்படி ஒரு சோகப்பாடலுக்கு இளையராஜா அமைத்திருக்கும் தாளம், சற்றே துள்ளலானது. வழக்கமாக சோகரசம் தொனிக்கும் பாடலென்றால் பண்டிட் பாலேஷுக்கு ஃபோன் செய்து, ‘செவன் டூ ஒன் வந்திருங்க பாலேஷ்ஜி’ என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து சொல்லி விடுவார்கள். அவரும் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பும் போதே தானும் மூக்கைச் சிந்தி, தன் ஷெனாயுக்கும் மூக்கைச் சிந்தச் செய்து கைக்குட்டையால் துடைத்து, அழைத்துச் செல்வார். ‘பாலேஷ்ஜி, ஒரு நாலு பார் ஹைபிட்ச்ல வாசிச்சு ஃபில் பண்ணிருங்க’ என்பார்கள்.

ஆனால் ‘தேவனின் கோயில்’ பாடலில் ஷெனாய்க்கு வேலையில்லை. இது போன்ற சோக கீதங்களில் கிட்டத்தட்ட ஷெனாயின் வேலையைச் செவ்வனே செய்திடும் புல்லாங்குழலும் நவீனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரு வாத்தியங்களின் வேலையையும் இந்தப் பாடலில் கிதார் எடுத்துக் கொள்கிறது. முதல் இடையிசையின் முடிவில் ’நானொரு சோக சுமைதாங்கி’ என்று பாடலின் மிக முக்கியமான பகுதியை சித்ரா துவக்குவதற்கு வசதியாக ’இந்தா புடிச்சுக்கோ, மகளே’ என்று தளம் அமைத்துக் கொடுக்கிறது, கிதார். பாடலின் துவக்கத்தில் பலகுரல்களாக ஒலித்த இளையராஜாவின் குரல், இரண்டாவது இடையிசையில் தெம்மாங்காக உச்சஸ்தாயியில் உற்சாகமாக ஒலிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் அந்த துள்ளலொலி பாடலின் மைய உருவைக் குலைக்கவில்லை. இது போன்ற நம்ப முடியாத இசை ஆச்சரியங்களெல்லாம் இளையராஜாவிடம் மட்டுமே சாத்தியம்.

ஒருநாள் திரைப்பட இயக்குனரும், நடிகருமான நண்பர் அழகம்பெருமாள் சொன்னார்.

‘வே, அத ஏன் கேக்கேரு? ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா? சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு? காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’.

இந்த முறை, இப்படி ஒரு கட்டுரை எழுதிவிடும் அளவுக்கு என்னை ‘தேவனின் கோயிலுக்குள்’ கொண்டு போய் விட்டு, கதற வைத்தது யார் என்று தீவிரமாக யோசித்து, சற்று சிரமப்பட்டே விடையைக் கண்டுபிடித்தேன். அது வேறு யாருமல்ல. நானேதான்.

மேலும்: http://solvanam.com/?p=22579

Ilayarajaa ang gangaiamaran

பாடல்: தேவனின் கோவில்
படம்: அறுவடை நாள்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா

ப்ரேமம் ப்ரேமாதிப் ப்ரேமப்பிரியம் ப்ரேம வஷ்யப் ப்ரேமம்
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
ப்ரியம் ப்ரியமாதிப் ப்ரீத்தித்த ப்ரேமம் ப்ரீத்திவஷ்ய ப்ரீத்தம்
ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம்
குமம் கும்கும் குங்குமம் தந்தோம்
தந்துனா மமஜீவனம் மமஜீவனம் மமஜீவனம்
மகம் கல்யம் மாங்கல்யம் தந்தோம்
மங்களா மமஜீவிதம் மமஜீவிதம் மமஜீவிதம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!

தேவனின் கோவில் மூடிய நேரம்
நானென்ன கேட்பேன் தெய்வமே?
இன்று என் ஜீவன் தேயுதே!
என் மனம் ஏனோ சாயுதே!

நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி!

இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி!

(தேவனின் கோவில்)

ஒருவழிப்பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா?

ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிடக் கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நானோர்க் கண்ணீர்க் காதலி!

(தேவனின் கோவில்)

இன்னுமொரு இனிய பாடலோடு மீண்டும் இணைவோம்.

புதிய உலகை

இசை வணக்கம்.

சில பாடல்களைக் கேட்கும்போதுதான் இன்னொரு முறை கேட்டாலும் தகும் எனத் தோன்றும். அந்த மாதிரியான பாடல்கள் கண்டிப்பாக வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாடலின் இசையோ, பாடலாசிரியரின் வரியோ, பாடியவரின் குரலோ இதற்கு காரணமாய் இருக்கலாம்.

கார்க்கியின் எளிய வரிகளுக்கு தாலாட்டு போல படரும் இமானின் இசையும், முழுப்பாடலுக்குமான சூழலை இனிமையாக ஆக்கிரமிக்கும் வைக்கம் விஜயலட்சுமியின் குரலும் நம்மை இப்பாட்லில் கவர்வதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

எந்தப் பாடலை விஜயலட்சுமி பாடினாலும் பாடலுக்குள் நம்மை மூழ்கடிக்கிறார். குரலில் மாயம் செய்யும் இவர் தொடர்ந்து நிறைய தமிழ்ப்பாடல்களைப் பாடினால் இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும்.

நீங்களும் கேட்டுப்பாருங்கள். உங்கள் Playlist-ல் இப்பாடலும் இணையும்.

vaikom vijayalakshmi

படம்: என்னமோ ஏதோ
இசை: டி.இமான்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
பாடியவர்: வைக்கம் விஜயலட்சுமி 

புதிய உலகை
புதிய உலகை
தேடிப் போகிறேன்
என்னை விடு!

விழியின் துளியில்
நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன்
என்னை விடு!

பிரிவில் தொடங்கி பூத்ததை,
பிரிவில் முடித்துப் போகிறேன்!

மீண்டும் நான்
மீளப் போகிறேன்
தூரமாய்
வாழப் போகிறேன்

(புதிய உலகை..)

மார்பில் கீறினாய்
ரணங்களை
வரங்கள் ஆக்கினாய்
தோளில் ஏறினாய்
எனை இன்னும்
உயரம் ஆக்கினாய்

உன் விழி போல
மண்ணில் எங்கும்
அழகு இல்லை என்றேன்!
உன் விழி இங்கு
கண்ணீர் சிந்த
விலகி எங்கே சென்றேன்?

மேலே நின்று உன்னை
நாளும் காணும் ஆசையில்…

(புதிய உலகை..)

யாரும் தீண்டிடா
இடங்களில்
மனதை தீண்டினாய்
யாரும் பார்த்திடா
சிரிப்பை என்
இதழில் தீட்டினாய்

உன் மனம் போல
விண்ணில் எங்கும்
அமைதி இல்லை என்றேன்!
உன் மனம் இன்று
வேண்டாம் என்றே
பறந்து எங்கே சென்றேன்?

வேறோர் வானம்
வேறோர் வாழ்க்கை
என்னை ஏற்குமா?

(புதிய உலகை..)

மற்றுமொரு இனிய பாடலோடு விரைவில் இணையலாம்.