முதலில் இசைப்பா ஒரு லட்சம் பார்வைகளை எட்டியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு பதிவு செய்வதில் பெருமை அடைகிறேன்.
செப்டம்பர் என்றால் பாரதியார், விவேகானந்தர் என்று பலரின் நினைவு வரும்.
இசைப்பாவில் இந்த வருட செப்டம்பர் மாதம் பாரதியுடன் இணைந்து உலா வரப்போவது எம்.எஸ்.எஸ். பாட்டுக்கென்று பிறந்தவர் பாரதி என்றால் பாடுவதற்கென்று பிறந்தவர் எம்எஸ். பாரதியின் பாடல்கள் எம்எஸ் அவர்களின் தேன் குரலில் புது உற்சாகம் புது அர்த்தம் கொடுப்பவை அல்லவா?
எம்எஸ் அவர்கள் பதினோரு மொழிகளில் பாடிய பாடல்களில் தமிழ் பாடலாக இடம் பெறுவது தான் பாரதியின் இந்த பாடல் – ‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்’.
பாடுபவர்களுக்கு எப்போதுமே மொழி ஒரு பிரச்னையாக இருப்பதில்லை. தங்களது ‘பாவம்’ மூலம் எந்தப் பாட்டையும் ரசிக்க வைத்துவிடுவார்கள். இந்தியா போன்று பல மொழிகள் பேசும் ஒரு நாட்டில் பிறந்த எம்எஸ் எப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக, தமிழ் பாட்டுக்களைப் பாடுபவராக மட்டும் இருக்க முடியும்? அவரது இசைக்கு இமயம் முதல் குமரி வரை ரசிகர்கள் இருக்கிறார்களே. உலகம் முழுக்க அவரது இசைக்கு மயங்குமே.
இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வியப்பு அளிக்கும் விஷயத்தை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பாரதிக்கும் எம்எஸ்எஸ் – க்கும் சிந்தனை செயல் இவற்றில் இருக்கும் ஒற்றுமை இந்தப் பாடலில் தெரிவதுதான் அந்த வியப்பான விஷயம்.
இந்திய பாடகர்களில் யாருக்குமே கிடைக்காத ஒரு வெகுமதியாக உலக அமைதிக்காக, நல்லிணக்கத்திற்காக எம்எஸ் ஐக்கிய நாடுகள் சபையில் பாடினார். இந்தக் கருத்தையே பாரதியும் இந்தப் பாடலில் ‘வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம்’ என்று கூறுகிறார்.
அதுமட்டுமல்ல – கவிதை எழுதியவரின் உள்ளக்கிடக்கையும், பாடியவரின் உள்ளக்கிடக்கையும் ஒன்றாக இருக்கிறது பாருங்கள்: ‘காணி நிலம் வேண்டும்’ என்று கேட்டார் பாரதி. பராசக்தி மறுத்துவிட்டாள். ஆனால் இந்தப் பாட்டில் பாரதி கேட்டதை பாரதிக்கு மட்டுமில்லாமல், எம்எஸ்எஸ்-க்கும் சேர்த்து வாரி வழங்கிவிட்டாள் சக்தி! என்ன அற்புதம் இது!
தமிழில் இருக்கும் ‘விண்ணப்பம்’ என்ற வார்த்தை செய்திருக்கும் அற்புதம் இது.
இந்த வரிகளைப் பாருங்கள் :
வெள்ளை மலர்மிசை வேதக்
கருப்பொரு ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன் .‘எள்ளத்தனைப் பொழுதும்
பயனின்றி இராதெந்தன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய்….’
இருவருக்கும் பொழிந்தே விட்டாள்சக்தி. பாட்டை அனுபவிப்போம், வாருங்கள்
பாடலாசிரியர் : மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாடியவர் : எம்.எஸ். சுப்புலட்சுமி
இசையமைப்பு : (தெரியவில்லை)
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே யுரைப்பீர் அவள் பேர் சக்தி
ஓம் சக்தி , ஓம் சக்தி, ஓம்
நம்புவதேவழி என்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட்டெந் நேரமும் “சக்தி” யென்றாலுனைக்
கும்பிடுவேன் மனமே .
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி .
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
வெள்ளை மலர்மிசை வேதக்
கருப்பொருளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்துடுவேன் .
எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
யிராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
வேல்சக்தி வேல்சக்தி வேல்!
இன்னுமொரு இனிய தமிழ் பாவுடன் விரைவில் இணைவோம்.