இசையின் வசமானவர்களுக்கு,

வணக்கம். இந்த பாடலை அனுப்பியவர் இசைப்பாவின் மூத்த பங்களிப்பாளர் ரஞ்சனி அவர்கள். அவர்கள் முழுச் சுதந்திரம் கொடுத்து இப்பாடலை வெளியிடக் கோரினார்கள். நான் சில வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறேன். அவ்வளவே. இதன் பாராட்டுகள் அனைத்தும் அவர்க்குரியதே.

இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களை அவ்வளவாகக் கேட்பதில்லை. இசை காதுக்கு இனிமையாக இருப்பதில்லை; அல்லது பாடகர் தமிழை கொலை செய்திருப்பார்; குரலினிமை இல்லாத இசை அமைப்பாளரே பாடி நம்மை ஒரு வழி பண்ணி விடுவார். மொத்தத்தில் ‘உனக்கு வயதாகி விட்டது’ என்பான் என் பிள்ளை!

‘வேட்டையாடு விளையாடு’ படத்தைப் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஆஹா ஓஹோ என்று எழுத, வரவில்லை என்று சொன்ன கணவரை கட்டாயப் படுத்தி கூப்பிட்டுக் கொண்டு திரை அரங்கில் இந்தப் படத்தைப் பார்த்து அவரிடமிருந்து செம திட்டு! ‘இதை விட வயலன்ஸ் படம் வேறு கிடைக்கவில்லையா பார்க்க?’ என்று இடைவேளையின் போதே ஆரம்பித்த திட்டு இன்று வரை ஓயவில்லை. அதனால் ‘விஸ்வரூபம்’ போகலாமா என்று பிள்ளை கேட்டபோது அப்பாவுக்கு டிக்கட் வாங்காதே என்று சொல்லிவிட்டேன். ஹி…ஹி….!

சரி இப்போது ‘பார்த்த முதல் நாளே’ பாட்டிற்கு வருவோம். முதல் தடவை கேட்டபோதே ரொம்பவும் பிடித்து விட்டது. எனது அலைபேசியில் காலர் டியூனாகப் போட்டுக் கொண்டேன். ஒரு புதிய அலையையே உருவாக்கி விட்டது இந்தப் பாடல்!

என் மாணவர்களுக்கு ரொம்பவும் வியப்பு நான் காலர் டியூன் போட்டுக் கொண்டது. இத்தனை நாள் இல்லாமல் இது என்ன? எதற்கு இந்தப் பாடலை போட்டுக் கொண்டேன் என்று கேள்வி மேல் கேள்வி. தமிழ் தெரியாத மாணவர்கள் பாடலுக்கு அர்த்தம் கேட்க ஆரம்பித்து விட்டனர்!  முதல் வரியில் வரும் ‘உன்னை’ என்பது யார் என்று அறிய ஆவல் அவர்களுக்கு!

பொதுவாக பாடல் நன்றாக இருந்தால் காட்சி அமைப்பு படு மோசமாக இருக்கும். காட்சி அமைப்பு நன்றாக இருந்து பாடல் சிலசமயம் படுத்தும். அப்படி இல்லாமல் பாடல், இசை, காட்சி அமைப்பு என்று எல்லாவற்றிலும் முதல் இடத்தைப் பிடிக்கிறது இந்தப் பாடல். பாடகர்களும் குறிப்பாக பாம்பே ஜெயஸ்ரீயின் கீழ் ஸ்தாயி குரல் பாடலுக்கு மெருகூட்டுகிறது.

படம் : வேட்டையாடு விளையாடு
பாடல் : பார்த்த முதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்கள் : உன்னி மேனன், பாம்பே ஜெயஸ்ரீ

பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே !

காட்டி கொடுக்கிறதே கண்ணே
காட்டி கொடுக்கிறதே !
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே !

உன் விழியில் வழியும் பிரியங்களை,
பார்த்தே கடந்தேன் பகல் இரவை.
உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன் !

காலை எழுந்ததும் என் கண்கள்,
முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே !
தூக்கம் வருகையில் கண் பார்க்கும்,
கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே !

என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும்,
நீ அறிந்து நடப்பது வியப்பேன் !
உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும்,
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் !

போகின்றேன் என நீ பல நூறு முறைகள்,
விடை பெற்றும் போகாமல் இருப்பாய் !
சரி என்று சரி என்று உனை போக சொல்லி,
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் ,
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் !!

காட்டி கொடுக்கிறதே,
கண்ணே காட்டி கொடுக்கிறதே…
காதல் வழிகிறதே,
கண்ணில் காதல் வழிகிறதே…

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே

உன்னை மறந்து நீ,
தூக்கத்தில் சிரித்தாய்,
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன் !

தூக்கம் மறந்து நான் – உன்னை
பார்க்கும் காட்சி கனவாக
வந்தது என்று நினைத்தேன் !

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்,
சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும் !
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை,
மரம் தோறும் செதுக்கிட வேண்டும் !

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்,
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் !
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் !!

பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே !

கம்பீரமான காவல் அதிகாரிகளுக்கு திரையில் மவுசு கூடியது சூர்யாவின் காக்க காக்க திரைப் படம் வந்தபின் தான். வேட்டையாடு விளையாடு படத்தில் இவர்களின் கம்பீரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறார், கமல் தன் அட்டகாசமான நடிப்பினால்.

அட்டூழியம் செய்யும் அநியாயக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் காவல் அதிகாரி, தன் மனைவியிடம் கொஞ்சி, குழைந்து, சண்டை போட்டு, பின் சரணடைந்து தான் ஒரு சாதாரண மனிதன் என்பதை இந்தப் பாடல் காட்சியில் நிரூபிக்கிறார். இது தான் இந்தப் பாடல் வெற்றி பெறக் காரணமோ?

Triple Treat !
Triple Treat !

கௌதம்-தாமரை-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் சிறப்பான பாடல்களில் இதுவும் கண்டிப்பாக இடம்பெறும். வெளிவந்த காலத்தில் பலரது காதுகளையும் குளிரவைத்த இப்பாடல் காட்சியமைப்பிலும் சிறப்பாகவே இருக்கும்.

6 thoughts on “பார்த்த முதல் நாளே

  1. இனிமையான பாடல் அருமையான ஒலிப்பதிவு ஒளிப்பதிவும் கூட கமல் காமிளேனி காம்பினெஷன் மிக மிக அருமை

  2. படம் வெளிவந்த புதிதில் மிகவும் ரசித்த பாடல் இது!! பாடல் வரிகளை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!

  3. ‘பார்த்த முதல் நாளே’ பாட்டிற்கு வருவோம். முதல் தடவை கேட்டபோதே ரொம்பவும் பிடித்து விட்டது.

    ரசிக்கவைத்த அருமையான பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..

பின்னூட்டமொன்றை இடுக